படத்தின் கிளைமேக்ஸ் சண்டையில் ஹீரோ கார்த்தி வில்லன் மிலிந்த் சொமனிடம் இரும்பு ராடால் 15-20 அடி வாங்கிய பிறகு நாயகி தமன்னாவை காப்பாற்ற 27 பேரை(எண்ணிட்டோம்ல) தனி ஆளாக அடித்து வீழ்த்துகிறார். இந்த ஒரு வரியே போதுமென்று நினைக்கிறேன் படத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள.
பெங்களூருவில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றித்திரியும் கார்த்தி, தமன்னா மீது கண்டதும் காதல் கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தமன்னாவிற்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக்கொள்கிறார். அது தமன்னாவை சென்னையில் கொண்டு சேர்ப்பது. ஆனால் தமன்னாவின் வேண்டுகோளுக்கிணங்கி, உடன் வந்தவரை விட்டுவிட்டு பெங்களூரு ஏர்போர்ட் செல்கிறார்கள். அங்கு விமானத்தை அவர் தவறவிட, பின் ரயிலிலும் செல்ல முடியாத நிலை. தன்னை எப்படியாவது மும்பையில் உள்ள தனது பாட்டி வீட்டில் கொண்டுபோய் சேர்க்கமுடியுமா என அவர் கார்த்தியை கேட்க, உள்ளுக்குள் காதல் கொண்டாட்டத்துடன் மும்பைக்கு காரை விரட்டுகிறார் கார்த்தி. வழியில் அவருக்கு என்ன பிரச்சனை என்று கார்த்தி கேட்ட பிறகுதான் தெரிகிறது அவரை கட்டாய திருமணத்திற்கு அழைத்துச் சென்றார்கள் என்பது. அனைத்தையும் அவ்வப்போது தனது நண்பர்களிடம் மகிழ்ச்சியுடன் சொல்லி மொக்கை போடுகிறார் கார்த்தி. அவ்வப்போது இவர்களை துரத்தும் ஆந்திரா கும்பலிடம் இருந்து தப்பிக்கிறார்கள். இதனிடையே மூன்று பாடல்கள் முடிந்துவிடுகின்றன. பிறகு வேறு ஒரு கும்பல் இவர்களை துரத்த, அப்போதுதான் தெரிகிறது இந்த கும்பல் துரத்துவது தமன்னாவை அல்ல, கார்த்தியை. இது மும்பை கும்பல். இவர்கள் அனைவரையும்(எத்தனை பேர்னு என்ன மறந்துட்டேன்) கார்த்தி அடித்து துவம்சம் செய்ய, இடைவேளை வருகிறது...!

பிறகு கார்த்தி தான் மும்பை பிளாஷ்பேக்கை சொல்கிறார். அந்த பிரச்சனையில் மிலிந்த் சோமனின் ஆட்கள் 10 -15 பேரை அடித்து சாய்த்தது தெரியவருகிறது. இனி என்ன நடக்கும் என்பது தமிழ் சினிமா பார்க்கும் குழந்தைக்குக் கூட தெரியும் என்றாலும் புதிதாக காட்டுவதுபோல் கதையை நகர்த்துகிறார் இயக்குனர். இப்போது கார்த்தியை தேடும் மும்பை கும்பலும், தமன்னாவை துரத்தும் ஆந்திர கும்பலும் கை கோர்த்துக்கொள்ள, அதே சமயம் கார்த்தி மும்பையில் முன்பு உதவி செய்த நண்பன் ஜெகனிடமே தமன்னாவுடன் அடைக்கலமாகிறார். ஜெகன் தமன்னாவின் பாட்டி இருப்பிடத்தை கண்டுபிடிக்க, கார்த்தி அவரை அங்கே விட்டுவிட்டு, தன் காதலை சொல்லாமலே துயரத்துடன் கிளம்புகிறார். (இந்த இடத்தில் ஆடியோ கேசட்டில் இல்லாத ஒரு புது பாடல் வருகிறது, பாடல் வரிகள் அருமை). பிறகு அந்த கும்பல் இவர்கள் இருவரையும் கண்டுபிடித்தார்களா, அவர்களை கார்த்தி எப்படி பந்தாடுகிறார், கார்த்தியின் காதல் கைகூடியதா என்பதெல்லாம் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
இயக்குனர் லிங்குசாமிக்கு கற்பனை கொஞ்சம் வரண்டுவிட்டது போல் தெரிகிறது. தனது படங்களையே ரீமேக் செய்ய ஆரம்பித்துவிட்டார். வழக்கமாக அவர் கையாளும் அதே கதை மற்றும் திரைக்கதை. பாடல்களை படமாக்கிய விதமும் சுமார் தான். பாடல்களை மிகவும் எதிர்பார்த்து போன எனக்கு பெரிய ஏமாற்றம் தான். ஒரே ஒரு புதுமை, பெங்களூரு-மும்பை பயணத்திலேயே முக்கால் வாசி படம் நகர்வதுதான். மற்றபடி புதுக்கோட்டையிலிருந்து சரவணன், கில்லி, சண்டைகோழி, பீமா என கலந்துகட்டி அடித்துள்ளார். நாயகன் கார்த்தி மற்ற இரண்டு படங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார். கொஞ்சம் அழகாகவும் தெரிகிறார். ஆனால் நாயகி தமன்னா அப்படியில்லை. சில இடங்களில் பயமுறுத்துகிறார்.

சிறிதுநேரமே வந்தாலும் நகைச்சுவையில் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார் ஜெகன்(சந்தானத்தை போட்டிருக்கலாம்). இரண்டாவது 'கெட்டப்' அருமை. பாராட்டப்பட வேண்டிய ஒருவர் படத்தின் ஒளிப்பதிவாளர் மதி. அந்த 'மிட்ஷுபிஷி லான்சர்' காரும். ச்சேசிங் சீன்கள், 'அடடா மழைடா' பாடலில் வரும் அதிரப்பள்ளி அருவி என சிறப்பாக செய்துள்ளார். யுவனின் இசை பாடல்களில் மட்டுமே நன்றாக உள்ளது. பின்னணி இசை சற்று சொதப்பல். நா.முத்துக்குமாரின் வரிகள் கலக்கல். கனல் கண்ணனின் சண்டைக்காட்சிகள் மிகவும் அபத்தம். அத்தனை அடியாட்களை எங்கிருந்து பிடித்தார்களோ தெரியவில்லை. எத்தனை பெரிய இரும்பு கம்பியாக இருந்தாலும் கைகளிலேயே தடுத்துவிடுகிறார் நாயகன். அனைவரின் கழுத்து, கை, கால் மற்றும் முதுகு எலும்புகளை படக் படக்கென உடைத்துவிடுகிறார். நம்ம லிங்குக்கு இன்னும் பீமா பீதி குறையவில்லை போல.
முதல் முறை படத்தை பார்க்கும்போதே இரண்டாவது முறை பார்ப்பதுபோல் ஒரு பீலிங். டைம் பாசுக்காக இல்லாமல் எதாவது எதிர்பார்த்து போனீர்களானால் கொலைவெறி நிச்சயம். வேற என்ன சொல்ல. ஆயிரத்தில் ஒருவனையே கிழித்து தோரணம் கட்டினார்கள். இது எப்படியோ...?
பையா : சூப்பர் (ட்ரெய்லர் மட்டும்)...!
டிஸ்கி : மூன்றாவது படத்திலேயே கார்த்தி 50 பேரை அடிக்கும்போது, ஐம்பதாவது படத்தில் இளைய தளபதி 100 பேரை பந்தாடுவதில் தவறே இல்லை என நான் நினைக்கிறேன். ஒருவேளை இப்படத்தில் நம் தளபதி நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ...?
அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!